தமிழ்நாடு

மாநில பொதுத்துறை நிறுவன பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆள்சேர்ப்பு

கலிலுல்லா

அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள் என மாநில அரசின் கட்டுப்பாடில் வரும் அதிகார அமைப்புகளிலுள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆட்சேர்ப்பதற்கான சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான மசோதாவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்த சட்டமுன்வடிவில், அரசின் கட்டுப்பாட்டில் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை   மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஓப்படைக்க அரசு முடிவு செய்து, இதற்கான சட்டமுன்டிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆள்சேர்க்கையானது விண்ணப்பதாரர்களின் தேர்வு முறையில் ஒத்த தன்மை கொண்டு வருவதாவும், அத்தகைய பணிகளுக்கு கிராமப்புறங்களில் மற்றும் ஒதுக்குபுறங்களில் உள்ள இளைஞர்கள் விண்ணப்பிப்பதற்கு வழி வகை செய்யவே சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகார அமைப்புகளில் எழும் காலி இடங்களை நிரப்புவதில் நிபுணத்துவத்தை பேணமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தின் மூலமாக போக்குவரத்து துறை, மின்சாரவாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், ஆவின், சுற்றுலா மேம்பாட்டு கழகம் போன்ற அரசின் நிறுவனங்களில் தனியாக நடைபெற்று வந்த பணி நியமனம் இனி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணம் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.