தமிழ்நாடு

சென்னை: சாலையில் தவறவிட்ட நகைகள் வாட்ஸ்அப் குழு மூலம் மீட்பு

Veeramani

சென்னையில் நகை வியாபாரி ஒருவர் ஆட்டோவில் செல்லும்போது தவறவிட்ட நகைகள், ஒரே வாரத்திற்குள் வாட்ஸ்அப் குழு மூலம் அவருக்கு திரும்ப கிடைத்திருக்கிறது.

மஹிபால் என்ற நகை வியாபாரி கடந்த 17ஆம் தேதி வேப்பேரியிலிருந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றபோது அவர் வைத்திருந்த சுமார் 365 கிராம் நகைகள் காணமல் போயின. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்ததோடு நில்லாமல் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வியாபாரிகள் சங்கங்களை அணுகி அவற்றின் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம், காணாமல் போன நகைகள் குறித்த விவரங்களை புகைப்படங்களுடன் பதிவிட்டார் மஹிபால்.

இந்த நகைகளை விற்க யாரேனும் வந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்பின்னர் காணாமல் போன நகைகளை விற்க ரமேஷ் என்பவர் முயற்சி செய்தபோது அந்த அடகுக்கடை உரிமையாளர் மஹிபாலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் காவல்துறைக்கு தெரிவிக்க ரமேஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஜோதி என்பவர் சாலையில் நகைகளை கண்டெடுத்ததாகவும் அதை தமது சகோதரிக்கும் சகோதரியின் மகளுக்கும் பிரித்து கொடுத்ததாகவும் கூறினார். இதையடுத்து சாலையில் கண்டெடுத்த நகையை காவல்நிலையத்தில் ஒப்படைக்காமல் பங்குபோட்டுக்கொள்ள முயன்ற நால்வரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.