தமிழ்நாடு

சென்னை: சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த பரிந்துரை

JustinDurai

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், அப்பள்ளியை மூட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் 5 அதிகாரிகள் அடங்கிய சிபிசிஐடி தனிப்படையினர் விசாரணை நடத்தினர். பாலியல் விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவிகள் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்களும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இப்பள்ளியைவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வேறு பள்ளியில் சேர்த்திட கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் குழந்தைகள் நலக் குழுமம் வலியுறுத்தியுள்ளது.