அருள் சம்பந்தம், synergy India
அருள் சம்பந்தம், synergy India pt web
தமிழ்நாடு

முதலீட்டாளர்களின் இலக்காக தமிழ்நாடு இருப்பதன் காரணமென்ன? தமிழகத்தில் அப்படி என்ன இருக்கிறது?

Angeshwar G

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல் நாளிலேயே அரசின் இலக்கான ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இரண்டாம் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நிகழ்ச்சியில் நிறைவு உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தொழில்வளர்ச்சியில் உலக முதலீட்டாளர் மாநாடு பெரும் பாய்ச்சலாக அமையும். முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டுக்கான 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதானி குழுமம் 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கும், டாடா பவர் நிறுவனம் 70,800 கோடி ரூபாய் அளவுக்கும் முதலீடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஸ்டார்ட் அப் துறையில் 200க்கும் அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்நிலையில் synergy India வெண்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அருள் சம்பந்தம், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதற்கான காரணங்களை நம்மிடையே விளக்கினார். புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக இது குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு என்னென்ன தேவைகள் என்றால், மிகமுக்கியமான ஐந்து விஷயங்களைச் சொல்லலாம். முதலில் இங்கு தொழில் செய்வதற்கான சூழல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது, இரண்டாவதாக வளங்கள். மனித வளம், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பிற.

மூன்றாவதாக உள்கட்டமைப்பு வசதிகள், நிலம், சாலை, கடல்வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து வசதிகள் போன்றவை. நான்காவதாக சுற்றுச்சூழல் அமைப்பு. ஐந்தாவதாக அரசின் நிலையான கொள்கைகள் போன்றவைகள் அடங்கும்.

எளிதாக தொழில் செய்வதற்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2014 ஆம் ஆண்டு தரவுகளின் படி, 190 நாடுகளில் 142 ஆவது இடத்தில் இருந்தது, அதுவே 2022 ஆம் ஆண்டு 63 ஆவது இடத்தில் இருந்தது. இதில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருந்தது.

தமிழகத்தில் மனிதவளம் என்பது அபரிவிதமானது. உதாரணத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 68.6% மக்கள் வேலை செய்யும் வயதுடையவர்கள். கிட்டத்தட்ட 50 மில்லியன். 5 கோடி பேர் வேலை செய்யும் மக்களாக இருக்கின்றனர். மேலும் தமிழத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 425க்கும் மேலான ஐடிஐ, 500க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி உள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் எண்ணெற்ற மாணவர்கள் படிப்பை முடித்து வெளிவருகின்றனர்.

உள்கட்டமைப்பை பொறுத்தவரை, தமிழகத்தில் மட்டும் 48 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. 286 மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. 4 வணிக துறைமுகங்கள் உள்ளன. 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

நிலையான அரசுக் கொள்கைகள், ஒவ்வொரு துறைக்கான கொள்கைகளையும் சமீபத்தில் அதிகளவில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இம்மாதிரி தொழில் தொடங்குவதற்கான சூழல் அனைத்தும் உள்ளதால் தமிழகம் தொழில் தொடங்குவதற்கான ஈர்ப்பு மையமாக உள்ளது” என தெரிவித்தார்.

கெவின் கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக கூறுகையில், “தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கியமான இடத்தில் உள்ளது. 20 வருடங்களுக்கும் மேலாக டாட் 3 இடங்களில் தமிழகம் உள்ளது. தொழில் நிறுவனங்கள் ப்ரீமியம், உயர்தர தயாரிப்பை தயாரித்திருந்தால் அதை அறிமுகப்படுத்த முதலில் தமிழகத்தைதான் தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில் ப்ரீமியம் பொருட்களுக்கு பணம் கொடுக்கலாம் என்ற பக்குவம் தமிழக மக்களுக்கு அதிகம் உண்டு” என தெரிவித்தார்.