தமிழ்நாடு

’நான் தற்கொலை செய்யப் போறேன்’-மனைவியிடம் சொல்லிவிட்டு ரேஷன்கடை ஊழியர் எடுத்த விபரீத முடிவு

webteam

உசிலம்பட்டி அருகே சம்பளம் தரவில்லை எனக் கூறி ரேஷன் கடை விற்பனையாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் மாயி. அதே ஊரிலுள்ள குப்பணம்பட்டி கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால் விரக்தியில் இருந்து வந்த மாயி, இன்று காலை கடைக்கு வேலைக்குச் சென்றவர், கடையின் அருகிலேயே விஷமருந்தி மயங்கி நிலையில் கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

இருப்பினும், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாயி பரிதாபமாக உயிரிழந்தார். ரேஷன் கடை விற்பனையாளர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்திருந்தாகவும், தனது மனைவியை தொடர்புகொண்டு சம்பளம் கொடுக்காததால் விரக்தியில் தற்கொலை செய்ய போவதாகவும் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.