தமிழ்நாடு

அதிமுக அழைப்பு விடுக்காததால் வருத்தமில்லை: ரத்தினசபாபதி எம்.எல்.ஏ

webteam

அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காததால் வருத்தமில்லை என்று அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்

அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றைத் தலைமை தேவை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடக்கும் இந்த கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர்கள் பங்கேற்கவில்லை. ராஜன் செல்லப்பாவை அடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காதது பற்றி அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி கூறும்போது, ‘’எனக்கு அழைப்பு விடுக்காதது பற்றி வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை. தற்போது அமமுகவில் நான் இல்லை என்று கூறிய பின்னும் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை’’ என்றார்.