தமிழ்நாடு

ராசிபுரம்: நீச்சல் பயிற்சி எடுக்க நினைத்தபோது அண்ணன் கண்முன்னே உயிரிழந்த சிறுவன்

webteam

ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியில் உள்ள கல்குவாரியில் நீச்சல் பயிற்சி எடுத்த சிறுவனொருவர் பரிதாபமாக தன் அண்ணன் கண்முன்னே உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர்கள் அருள் - மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 5 ம் வகுப்பு படிக்கும் அரவிந்த் (10) என்ற மகனும், 4 ம் வகுப்பு படிக்கும் ஜீவா (8) என்ற மகனும் உள்ளனர். இத்தம்பதியினர் தற்போது வேலை காரணமாக சேலத்தில் குடும்பத்துடன் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் சொந்த ஊர் புதுப்பட்டிக்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். அப்போது இவர்களின் குழந்தைகள் அரவிந்த், ஜீவா உட்பட 5 சிறுவர்கள் புதுப்பட்டியில் மாதேஸ்வரன் என்பவரது தோட்டத்தில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளனர்.

இவர்களில் ஜீவாவிற்கு நீச்சல் தெரியாததால் அரவிந்த் அவருக்கு நீச்சல் சொல்லிக் கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அண்ணண் அரவிந்தின் கண்ணெதிரே தம்பி ஜீவா நீரில் நிலைத்தடுமாறி மூழ்கியுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புதுறை மற்றும் காவல்துறையினர் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இதனால் அண்ணனின் கண்முன்னேவும் தம்பி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இச்சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.