தமிழ்நாடு

ராசிபுரம்: உறவினர்கள் புடை சூழ வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்

webteam

ராசிபுரம் அருகே வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்த குடும்பத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் இவர், கடந்த சில வருடங்களாக நாய் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து பைரவன் மற்றும் பைரவி ஆகிய 2 நாய்களை வளர்த்து வரும் நிலையில், பைரவி என்ற நாய் கர்ப்பமாக உள்ளது.

இந்நிலையில், தனது வீட்டில் பெண் பிள்ளைகளைப் போல பைரவி நாயை வளர்த்து வருவதால் அதற்கு வளைகாப்பு நடத்த தனது குடும்பத்தினருடன் ரமேஷ் பேசி முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் பைரவிக்கு வளைகாப்பு நடைபெறுவதாக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்று அருகில் இருந்து உறவினார்கள் பைரவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வளையல், பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்டவைகளை அணிவித்து வளைகாப்பை நடத்தினர்.

இதையடுத்து வளைகாப்பில் முக்கியமான தக்காளி, லெமன், புளி ஆகிய 3 கலவை சாதங்களும் இனிப்பு வகையில் கச்சாயம், கார வகையில் போண்டா, அப்பளம் உள்ளிட்டவைகளை தலைவாழை இலையில் வைத்து வளைகாப்பை நடத்தினார். வளைகாப்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மொய் பணம் வைத்தனர். தனது பிள்ளைக்கு நடத்தப்படும் வளைகாப்பைப் போல நாய்க்கு வளகாப்பு நடத்திய குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.