தேவாங்கு Pt web
தமிழ்நாடு

மதுரையில் 2ஆவது தேவாங்கு சரணாலயம்? பொதுமக்கள் கோரிக்கை!!

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரிய வகை சாம்பல் நிற தேவாங்குகள் அதிகளவில் காணப்படுவதால், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்க தமிழ்நாட்டின் இரண்டாவது தேவாங்கு சரணாலயத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

PT WEB

மதுரை சுற்றுவட்டாரத்தில் அழகர்மலை அடிவாரம், கேசவன்பட்டி, இடையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவாங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருவதும், குறிப்பாக கேசவன்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தேவாங்குகள் இருப்பதும் அறிவியல் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படும் இந்த சாம்பல் நிற தேவாங்குகள், இரவு நேரத்தில் மட்டுமே செயல்படும் வன உயிரினங்களாகும். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்வதன் மூலம் பல்லுயிர் சமநிலையைப் பேணுவதிலும், காடுகளின் இயற்கை மறுஉருவாக்கத்துக்கும் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் தேவாங்குகள், வாழிட அழிவு, சாலை விபத்துகள் மற்றும் மூடநம்பிக்கைகளால் பிடித்துச் செல்லப்படுதல் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன.

மேலும் கல்குவாரிகளில் குண்டு வெடிப்பதால் தேவாங்குகள் பெரும் இடையூறுக்கு ஆளாகின்றன. ஏற்கெனவே தமிழக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு திண்டுக்கல் - கரூர் மாவட்ட எல்லையில் உள்ள கடவூர் பகுதியில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயத்தை அமைத்துள்ளது. இந்நிலையில், மேலூர் பகுதியிலும் இரண்டாவது சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, அறிவியல்ரீதியான கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.