தமிழ்நாடு

தமிழகத்தின் அரிய மூலிகைகள் கேரளாவுக்கு கடத்தல்?

தமிழகத்தின் அரிய மூலிகைகள் கேரளாவுக்கு கடத்தல்?

webteam

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தின் கடையம் சுற்றுவட்டாரப்பகுதியின் மூலிகை வளம் கொள்ளை அடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கடையம் பகுதி மூலிகை வளம் பெருமளவு நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் விளையும் மூலிகைச் செடிகள் பறிக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழக சிறு, குறு விவசாயிகளின் ஒத்துழைப்போடு நடைபெறும் இத்தகைய கொள்ளைக்கு வனத்துறை அதிகாரிகளும் உடந்தை எனவும் கூறப்படுகிறது. இதற்கென பெரிய கிடங்குகள் அமைத்து அங்கு மூலிகைகள் பதப்படுத்தப்பட்டு, பின்னர் கடத்தப்படுகின்றன என்றும், இங்கிருக்கும் வளத்தை கேரளாவிற்கு கொள்ளை அடித்து செல்வது மட்டுமில்லாமல் மூலிகை கழிவுகளை கொண்டு வந்து கடையம் பகுதியிலேயே கொட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வனத்துறையின் களக்காடு முண்டந்துறை கள இயக்குனர் வெங்கடேஷிடம்‌ கேட்டபோது, “வனப்பகுதியில் மூலிகைச் செடிகள் பறிக்கப்படவில்லை. மூலிகைகள் கேரளாவுக்கு கடத்தப்படுவது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும் அது போதுமானதாக இல்லை என்பதே அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக உள்ளது. தமிழக, கேரள எல்லையில் சோதனைச் சாவடிகளை அதிகரித்து, சோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் மட்டுமே ராம நதி முதல் கடனா நதி வரை உள்ள அரிய மூலிகை வளங்களை காப்பாற்ற முடியும் என்பது கடையம் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.