பெருமாள்
பெருமாள் pt wep
தமிழ்நாடு

சோளிங்கர்: ரேஷன் கார்டு இல்லாததால் பிரிந்துசென்ற மனைவி; 35 ஆண்டுகளாக மனுவுடன் போராடும் கணவன்!

PT WEB

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சுபாராவ் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்(65). இவர் கட்டிடக் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகி 35 ஆண்டுகள் ஆகிறது. தற்போது வரை குடும்ப அட்டை பெறாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இவரது மனைவி கற்பகம்(58) 15 ஆண்டுகளுக்கு முன்பு யுவராஜ், சிகாமணி தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், பெருமாள் தனது தங்கையான கௌரி(61) என்பவருடைய வீட்டில் வசித்து வருகிறார். பெருமாள் குடும்ப அட்டை பெறுவதற்காக 35 ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம், சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம், என அனைத்து அரசு அலுவலகங்களிலும் மனுக்கள் வழங்கியுள்ளார். இணையதளம் வாயிலாக குடும்ப அட்டை பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளார்.தற்போது வரை அவருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ரேஷன் அரிசியுடன் பெருமாள்

இது தொடர்பாக பேசிய பெருமாள், "எனக்கு திருமணம் ஆகி 35 வருடங்கள் ஆகிறது. ரேஷன் அட்டை வாங்குவதற்காக 20 ஆண்டுகளாக மனு கொடுத்துச் சலித்து போய்விட்டது. ரேஷன் அட்டை இல்லாததால் என்னுடைய மனைவி என்னிடம் சண்டை போட்டு விட்டு மகன்களை அழைத்து கொண்டு சென்றுவிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களிடம் கையேந்தி அரிசி வாங்கி சமைத்து சாப்பிடுகிறேன்.வேறு வழியில்லை எனக்கு அரசாங்கம் ரேஷன் அட்டை கொடுத்தால் நல்லது. ரேஷன் அட்டை இல்லாததால் எனக்கு வரக்கூடிய பென்ஷன் வரவில்லை. ரேஷன் அட்டை கொடுத்தால் தான் உனக்கு பென்ஷன் வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ரேஷன் அட்டை இனிமேல் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" என வேதனையுடன் தெரிவித்தார்.