தமிழ்நாடு

கேரள நிதி : கருவாடு விற்கும் மீனவரின் உயர்ந்த உள்ளம்

webteam

ஏழ்மையுடன் கருவாடு விற்கும் மீனவர் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் கொளுத்தும் வெயிலில் கருவாடுடன் காயும் மீனவர் தான் கார்த்திகேயன். இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். பெரிய விசைப்படகுக்கு செல்வோர் பயன்படுத்தும் சிறிய படகை கொண்டு, குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டிவருகிறார். சிறு மீன்களை வாங்கி கருவாடாக்கி சில்லறை விற்பனைக்கு கொடுத்து வருகிறார். கேரள மக்கள், வெள்ள பாதிப்புகளால் பெருந்துயரத்தில் இருப்பதை அறிந்து, இவர் தனது உண்டியல் சேமிப்புத்தொகையான ரூ.2 ஆயிரத்தை நிதியாக புதிய தலைமுறை அறக்கட்டளை வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்.

கஷ்டமான பொருளாதார சூழலில் இருந்தாலும், கார்கில் போர் சமயத்தில் ‌ஆயிரம் ரூபாயை நிதியாக அளித்தவர்தான் இந்த மீனவர். வாடும் மனிதர்களை கண்டு மனம் வாடும் இவர் போன்ற மனிதர்களின் பேரன்பு, எத்தகைய துயரத்தையும் கடக்கும் மன வலிமையை தரும் என்றால் அது மிகையல்ல.