செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. இதில் ரூ.50 டிக்கெட் பெற்று வரிசையில் சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் மாவட்டம் சிவாட்பாரி பகுதியைச் சேர்ந்த ராஜ்தாஸ் (59) என்ற பக்தர் மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசாரின் உதவியோடு கோயில் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரின் உடல் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த திருக்கோயில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் மாவட்டம் சிவாட்பாரி பகுதி காவல் நிலையத்திற்கு இறந்தவரின் புகைபடத்தை அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.