தமிழ்நாடு

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவிலில் ஆளுநர் ஆர்என்.ரவி குடும்பத்துடன் தரிசனம்

kaleelrahman

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் வந்தார். அவரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டு ராமநாத சுவாமி சன்னதியில் ஸ்படிக லிங்க தரிசனம், பொது தரிசனத்தில் தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில்; ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று அவர், தரிசனத்தை முடித்துவிட்டு தனது குடும்பத்தாருடன் தனுஷ்கோடி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார்.