தமிழ்நாடு

ராமேஸ்வரம்: 11 மீனவர்களை விடுவிக்கக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம்

kaleelrahman

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக பிடிக்கப்பட்ட விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும். வருகின்ற 11ம் தேதி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் தங்களுடைய பகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.