செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று இரவு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு விசைப்படகையும் அதிலிருந்த ராமு, ஜார்ஜ், கென்னடி, ஜோதிராஜன்4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து நான்கு பேரும் படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனிடையே இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த டெம்ரோ, அந்தோணி, செல்வராஜ் உட்பட ஆறு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பின் ஆறு மீனவர்களை இரண்டு படகுடன் மயிலட்டி மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மூன்று விசைப்படகுடன் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை கடற்படை முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.