அனுமதியின்றி கோயிலுக்கு வந்த பொதுமக்கள், ராமானுஜரை தரிசிக்க விடாமல் தடுத்ததாக இந்து அறநிலைத்துறை துறை அதிகாரிகளுடன் ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் வாக்குவாதம் செய்தனர்
ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, ராமானுஜரின் அவதார உற்சவ விழா, ஆண்டுதோறும், 10 நாட்கள், விமரிசையாக நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு, 1,004ம் ஆண்டு அவதார உற்சவ விழா, 10 நாட்கள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கொரோனா தொற்று, மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதால், தமிழக அரசு, திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, உற்சவ விழா பக்தர்கள் கூட்டமின்றி, எளிமையாக தொடங்கியது.
பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க கோயில் நிர்வாகம் சார்பில் இன்று நடந்த சாத்துமுறை விழா யூ டியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் திருவிழாவின் மிகவும் விசேஷமான ராமானுஜர் அவதரித்த நாளான இன்று ராமானுஜரை தரிசிக்க பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் குவிய தொடங்கினர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத காலத்தில் எதற்காக அனுமதியின்றி கோயில் வளாகத்திற்குள் வந்தீர்கள் என இந்து அறநிலையத் துறையினர் பொதுமக்களிடையே கடிந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்துக்குள் உள்ள கண்ணாடி மாளிகையின் முன்புறம் உள்ள மண்டபத்தில் பொதுமக்கள் யாரும் பார்த்திராத வண்ணம் திரை அமைத்து கோயில் பட்டர்கள் திவ்ய பிரபந்தம் பாட தொடங்கினார். இதனால் பக்தர்கள் ராமானுஜரை பார்க்க இயலாமல் ஏமாற்றமடைந்தனர். வெகுநேரமாகியும் கண்ணாடி மாளிகையின் முன்புறம் மண்டபத்தில் இருந்த திரையை அகற்றாமல் இருந்த காரணத்தினால் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒரு சிலர் மண்டபத்தின் கதவை திறந்து உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டனர். இதனால் அங்கே பரபரப்பு சூழல் உருவாகியது . அதன் பிறகு இந்து அறநிலை துறை அதிகாரிகள், பொதுமக்கள் ராமானுஜரை தரிசிக்க தடையாய் இருந்த திரைச்சீலையை அகற்றினர்