செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஏனாதிகோட்டை கிராமத்தில் நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இல்லை. ஆகையால் கிராம மக்கள் பரமக்குடி அல்லது பார்த்திபனூருக்கு செல்வதற்கு ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், தங்கள் ஊருக்கு பேருந்து வசதி வேண்டி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எம்எல்ஏ-வின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் ஏனாதிகோட்டையில் இருந்து பார்த்திபனூர் வழியாக பரமக்குடிக்கு தினமும் இரண்டு முறை செல்லும் புதிய பேருந்து சேவையை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
இதனையொட்டி ஏனாதிகோட்டை கிராம மக்கள் முதன் முதலாக ஊருக்குள் வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து குலவை போட்டு வரவேற்றனர். இதையடுத்து அந்தப் பேருந்தில் ஏறி மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர்.