மக்களின் குரலை மக்களுக்காக ஒலிக்கச் செய்தவர் இந்தியாவின் சமூக வானொலியின் தந்தை என போற்றப்படுகிறார் டாக்டர் ராமமூர்த்தி ஸ்ரீதர். வானொலியை மக்களுக்கான ஒரு சமூக மாற்ற கருவியாக உருவாக்கியவர்.
இந்தியாவில் சமூக வானொலியின் தந்தை என்று அழைக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராமமூர்த்தி ஸ்ரீதரின் நம்பிக்கை மிக எளிமையானது. ஊடகங்கள் ஒருவழி தொடர்பு கருவியாக இருக்கக்கூடாது, மாறாக தொடர்பு கொள்ளும் படி, பங்கேற்கும் படி இருக்க வேண்டும் மற்றும் சமூக மாற்றத்திற்கான ஒரு தளமாக இருக்க வேண்டும் என்பதே. அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பே சமூக வானொலி.
சமூக வானொலியில் கேட்பவர்கள் பேச்சாளர்களாக மாறுகிறார்கள். சமூகங்கள் தங்கள் சொந்தக் கதைகளைச் சொல்கின்றன. அந்தந்த சமூகங்களின் வளர்ச்சி என்பது உள்ளூர்மயமாக்கப்பட்டது மற்றும் அவர்களின் தேவை அடிப்படையிலானது. அதாவது மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டது.
ராமமூர்த்தி ஸ்ரீதரின் மிகப்பெரும் பங்களிப்பாக பார்க்கபடுவது யாதெனில் பழங்குடிப் பகுதிகள் முதல் நகர்ப்புற குடிசைப் பகுதிகள் வரை மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்குக் கூட வானொலியை அணுகக்கூடியதாக மாற்றியது.
வானொலியில் விவசாயப் பிரச்னைகள், சுகாதார விழிப்புணர்வு, பெண்களின் உரிமைகள் முதல் கல்வி, உள்ளூர் இசை மற்றும் நாட்டுப்புறக் கதைகள் வரை அனைத்தையும் மக்களின் குரலிலும் மொழியிலும் உரையாற்ற முடியும் என்று நம்பினார் டாக்டர் ஸ்ரீதர்.
இதனையும் சமூக வனொலி உருவாக்கியதையும் கருத்தில் கொண்டே பத்மஸ்ரீ தனக்கு கிடைத்திருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
1991-1993 ஆண்டுகளில் மானுடம் வென்றது என்ற நிகழ்ச்சி வாயிலாக மிகவும் பேசப்பட்டு பிரபலமடைந்தார் ஸ்ரீதர். இந்த நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்ட ஒரு அறிவியல் தொடர் நிகழ்ச்சி. 18 மொழிகளில் 200 வானொலி நிலையங்களில், 1,40,000 மாணவர்களை இணைத்து 140 வாரங்களுக்கு மேலாக ஒலிபரப்பப்பட்டது. மனிதனின் அறிவியல் வளர்ச்சியையும், தொழில்நுட்பம் முன்னேற்றத்தையும் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் நாடக வடிவில் தயாரிக்கப்பட்டது.
இதனையும் சமூக வனொலி உருவாக்கியதையும் கருத்தில் கொண்டே பத்மஸ்ரீ தனக்கு கிடைத்திருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில் 550 செயல்பாட்டு சமூக வானொலி நிலையங்கள் தொடங்க முழு பங்காற்றியுள்ளார். ஸ்ரீதரின் பங்களிப்பால் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற சமூக ஒளிபரப்பாளர்கள் மாற்றத்தை வழிநடத்த அதிகாரம் பெற்றுள்ளனர்.
28 ஆண்டுகள் பல பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், டாக்டர் ஸ்ரீதர் சமூக வானொலி நிலையங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். அவர் தனது பாட்காஸ்ட்கள் மூலம் மூத்த குடிமக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பழங்குடியினர், திருநங்கைகள் போன்ற குரலற்றவர்களுக்கு குரலாக இருக்கிறார்.
எல்லோருக்குமான குரல் வானொலி
டாக்டர் ஆர். ஸ்ரீதரின் பங்களிப்பு வெறும் தொழில்நுட்பம் அல்லது கல்வி சார்ந்தது மட்டுமல்ல - வானொலி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் அறிவித்தார் . வானொலியை அதிகாரமளிக்கும் தளமாக அவர் மறுவரையறை செய்தார். சமூகங்களுக்கு உயிர்நாடியாக மாறி, அவர்கள் பேசவும், கேட்கப்படவும், அவர்களது சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரவும் உதவியுள்ளார். எல்லோருக்குமான குரல் வானொலி என்று அறிவித்தவர் .
அவரை போனில் தொடர்புக் கொண்ட போது காட்சி வானொலி குறித்தும் AI காலத்தில் வானொலி எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கும் பதிலளித்து பேசினார்
”காட்சி வானொலிதான் எதிர்காலம். ஆல் இந்தியா ரேடியோவில் டி ஆர் எம் (Digital Radio Mondiale DRM) என்று வைத்திருக்கிறார்கள். ஹூண்டாய் கார்களில் இந்த டிஆர்எம் இருக்கும். மொபைலில் வானொலி கேட்கும் போது அதற்கான ஸ்கிரீனில் தலைப்பு செய்திகள், கிரிகெட் ஸ்கோர் மற்றும் வானிலை குறித்த தகவல்களை பார்க்கலாம். இந்த காலத்தில் வானொலி பெட்டிகள் இல்லை அழிந்து போயின. அதனால் எல்லோரும் மொபைலில்தான் ரேடியோவை கேட்கிறார்கள். ரேடியோவும் காட்சி ஊடகங்களுக்குள் வரவேண்டும்” என்றார்
மேலும், “ஆல் இந்தியா ரேடியோவில் 73 இடங்களில் டி ஆர் எம் இருக்கிறது ஆனால் அதனை நடத்த நிகழ்ச்சி உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் கிடைக்கவில்லை . காட்சி வானொலி சமூகங்களையும் சென்றடையும்” என்று கூறுகிறார் ஸ்ரீதர் . ”ஜியோ வந்த பிறகு எல்லோரும் தினமும் யூடியுபில் லயித்திருக்கிறார்கள் காட்சி வானொலி அந்த இடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கிறது. பிறந்த நாள் விழா முதல் திருமண நிகழ்வுகள் வரை அது குறித்த ஒளிப்படங்களை காட்சி வானொலியில் இடம் பெற செய்யலாமே. ரூ.1000 செலவு செய்து பதாகைகள் வைப்பதற்கு பதிலாக காட்சி வானொலியில் அறிவிக்கலாமே” என்கிறார்.
”AI வானொலி நிகழ்ச்சிகளை உருவாக்குவதை எளிதாக்குகிறது. , அதன் தயாரிப்புச் செலவையும் குறைக்கிறது. AI என்பது வெறும் ஒரு கருவியாக இல்லாமல், பரந்த ஆடியோ துறையில் ஒரு தொழிலாக மாறியுள்ளது. AI என்பதே ஒரு ஆடியோ துறைதானே. AI வானொலிக்கு அச்சுறுத்தல் இல்லை பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது” என்கிறார்.
”மூத்த குடிமக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சமூகத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும் அனுபவ் என்ற வானொலியை கோயம்புத்தூரில் ஆரம்பித்து இந்தியாவில் மேலும் 10 இடங்களில் ஆரம்பித்திருக்கிரார்கள். அனுபவ் 3.0 செயற்கை நுண்ணறிவின் உதவியோடு செயல்படுத்த போகிறோம்.
சமூக வானொலியால் ஈர்க்கப்பட்டு பல பெண்கள வேலைவாய்ப்பு பெற்றதாகவும் அவற்றில் மாகாராஷ்டிராவில் ஒரு பெண் வானொலியில் பேசி பிரபலமடைந்து பின்பு பஞ்சாயத்து தலைவராக வளர்ந்ததையும் , ஜமீலா என்ற பெண் ஆட்டோ டிரைவரின் மனைவி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வானொலியில் கலந்துரையாட வந்தவர் பின்பு டாக்டர் பட்டம் பெற்றார்” என்று சிலவற்றை நினைவு கூர்கிறார்