ராஜூவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலைக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை தொடங்கியது. ராஜூவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றக் இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின்போது 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் சென்னை செண்டரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 7 பேர் விடுதலை செய்யும் பரிந்துரையை காலதாமதம் இன்றி செய்யப்படும். அது இன்றே பரிந்துரை செய்யப்படும் என்றார். அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மேலும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளதாகவும் கூறினார்.