தமிழ்நாடு

“விடுவிக்க முடியாதா? என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” - அற்புதம்மாள் வேதனை

“விடுவிக்க முடியாதா? என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” - அற்புதம்மாள் வேதனை

Rasus

கடந்த 27 வருடங்களாக சிறையில் இருக்கும் தன் மகனை விடுவிக்க முடியாவிட்டால் நீங்களே கருணைக் கொலை செய்துவிடுங்கள் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்கள் விடுதலைக்காக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. அதேபோல தனது மகனான பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம்மாளும் பல்வேறு விதமாக போராடி வருகிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் 7 பேரின் விடுதலைக்காக முயற்சி செய்தார். பின்னர் அதுவும் தாமதமானது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், “உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இது மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய பிரதமரின் கொலைக் குற்றவாளிகள் எந்தச் சூழலிலும் சுதந்திரமாக நடமாட முடியாது” என்றார்.

இதுகுறித்து பேசிய பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், “என் மகன் விடுதலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. மாநில அரசு இவ்விஷயத்தில் திறம்பட செயல்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என் மகன் வீட்டிற்கு வந்துவிடுவான் என உறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது நான் சோர்வுற்று உணர்கிறேன். எனது மகனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என மத்திய, மாநில அரசாங்கத்திற்கு கடிதம் எழுத உள்ளேன். கடந்த 27 வருடங்களாக அவர் சிறையில் கஷ்டப்பட்டு வருகிறார். அவர் இனிமேலும் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது. அதற்கு அரசாங்கமே அவரை கருணைக் கொலை செய்து விடலாம். அவரை விடுவிக்க அரசாங்கம் தனது அதிகாரங்களை பயன்படுத்தவில்லை. குறைந்தபட்சம் அவர் சிறையில் கஷ்டப்படாமல் இருக்க கருணைக் கொலையாவது செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.