தமிழ்நாடு

அரசியலுக்கு வருவேனா? இல்லையா? - ரஜினி மீண்டும் ஆலோசனை

webteam

அரசியலுக்கு வருவேனா? இல்லையா என ரசிகர்களிடம் கேள்வி நிலவும் நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அதுகுறித்து ஆலோசிக்க உள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவி வந்த சூழலில், தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த பலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் கடந்த 9-ஆம் தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார்.

மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த பிறகு மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. காரணம், 'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிவதில் தாமதமாகிவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்கா சென்று வந்தேன்.

மக்கள் மன்றத்தை தொடரலாமா? தொடர்ந்தால் என்ன பணிகள்? நானும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போறேனா? இல்லையா? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன்” எனத் தெரிவித்தார்.