தமிழ்நாடு

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர்கள் சென்னையில் போராட்டம் - காவல்துறை அனுமதி

webteam

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி ‘ஆன்மிக அரசியல் அழைப்பு விழா’ என்ற பெயரில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் நாளை நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதனை வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் நாளை காலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டமானது ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் ராம்தாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

முன்னதாக, கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ரஜினி சவுந்தர் மற்ற ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளங்கில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அறப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தன்னுடைய உடல்நலத்தைச் சுட்டிக்காட்சி அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக நடிகர் ரஜினி காந்த் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.