தமிழ்நாடு

“எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்ததற்கு நன்றி” - ரஜினிகாந்த்

webteam

அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் தொடர்பான தனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விளக்கியிருந்தார். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்று தெரிவித்திருந்தார். கட்சி ஆரம்பித்தால் முதியவர்களை தவிர்த்து இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளதாகவும், கட்சியில் நிறைய பதவிகளை தவிர்த்து தேவையான பதவிகளை மட்டுமே வைத்துக்கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார். அத்துடன் மக்களிடம் எழுச்சி வரவேண்டும் எனவும், அப்போதுதான் அரசியலுக்கு வருவேன் எனவும் தெரிவித்திருந்தார்.