ராஜஸ்தானை சேர்ந்த பக்தர்கள்
ராஜஸ்தானை சேர்ந்த பக்தர்கள் PT WEP
தமிழ்நாடு

பிரதமரின் வருகையால் போக்குவரத்துக்கு துண்டிப்பு; ராமேஸ்வரத்தில் 1200 ராஜஸ்தான் பக்தர்கள் தவிப்பு!

PT WEB

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் போலீசார் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ராமேஸ்வரம் மாநகர் பகுதி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 12 மணி முதல் நாளை வரை தனுஷ்கோடிக்குப் போக்குவரத்து தடை‌ செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை இராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்குச் செல்லும் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ராமேஸ்வரம் நகர்ப் பகுதியில் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்குக் கனரக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் ஏ.டி.ஜி.பி, ஐ ஜி, டி ஐ ஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 3400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் நகரில் இரண்டு நாள்கள் ட்ரோன் கேமராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள போலீசார் தங்குவதற்காக ராமேஸ்வரத்தில் உள்ள 12 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆன்மீகப் பயணமாக ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதே போல் ராஜஸ்தானிலிருந்து 1200க்கும் மேற்பட்டோர் சுற்றுலாப் பயணிகள் நேற்று முன் தினம் ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் இன்று இரவு மதுரை கூடல் நகர் ரயில் நிலையம் வழியாகச் சிறப்பு ரயில் மூலம் ராஜஸ்தான் செல்ல இருந்தனர்.

இதற்கிடையில், இன்று பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார் பிரதமரின் வருகையையொட்டி ராமேஸ்வரம் மாநகர் பகுதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் ராஜஸ்தானில் இருந்து வந்த 1200க்கும் மேற்பட்டோர் பயணிகளில், 50க்கும் மேற்பட்டோர் விடுதிகளில் தங்கி இருந்த நிலையில் அவர்களும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியுள்ளனர்.

இதனையடுத்து, இவர்களை அழைத்து வந்த சுற்றுலா நிர்வாகி, "பிரதமர் மோடி சாமி தரிசனம் முடித்த பிறகு, 4 மணிக்கு மேல் பேருந்து மூலமாக ராமேஸ்வரத்திலிருந்து மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம்” எனத் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி வெளியான நிலையில், மாவட்ட எஸ்.பி ராஜஸ்தானை சேர்ந்த பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்து செல்ல பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.