தமிழ்நாடு

தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!

kaleelrahman

தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனியில் வசித்த எஸ்கே.அய்யாசாமி - ஏ.ரத்தினம்மாள் தம்பதியரின் மகன் ராஜன் என்ற சேர்மராஜன். வணிகர் குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார்,

பத்தாம் வகுப்பு வரை ஓடைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பை முடித்தார். பின்னர், உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் இளங்கலை படிப்பையும், மதுரையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் முதுகலை படிப்பையும் முடித்து பட்டம் பெற்றார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜன், பிரிக்கப்படாத பீகாரில் உள்ள ராஞ்சியில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். சசாரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த அவர், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற ரோஹ்தாஸ் மாவட்டத்தின் எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் தேர்தல் பணிகளில் நிபுணரான ராஜன், பீகாரின் சில முக்கிய காவல் மாவட்டங்களான ரோஹ்தாஸ், பாகல்பூர், முசாபர்பூர், ஜெகனாபாத் மற்றும் கிழக்கு சம்பாரண் போன்ற இடங்களில் பணியாற்றியுள்ளார்.

பீகாரில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், 1999-ல் உளவுப்பிரிவில் சேர்ந்தார். பின்னர், ஐபியில், புதுதில்லி, தமிழ்நாடு, குஜராத், லடாக் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற இடங்களில் பணியாற்றினார். மேலும் லண்டனில் உள்ள இந்திய தூதகரத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த இருபது ஆண்டுகளாக மத்திய உளவுப் பிரிவில் பணியாற்றி வந்த இவர், ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.