சென்னை சைதாப்பேட்டையில் அடையாற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றுள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று சைதாப்பேட்டை. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உண்ண உணவின்றி கூட அப்போது மக்கள் அவதியுற்றனர். இந்நிலையில் தற்போது தொடர்ச்சியாக மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் அடையாற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் சைதாப்பேட்டையில் அடையாற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீருடன், பாம்பு, பல்லி போன்றவைகள் வருவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்களும், செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதனிடையே அடையாற்றின் கரையோர வீடுகளில் வசித்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக சமுதாயநலக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.