தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

ஜா. ஜாக்சன் சிங்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும்,
வட கேரளா - கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.