தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் கனமழை பெய்யும். ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர்தான் இருக்கும். சில சமயங்களில் தூரல் மழை பெய்யும். ஆனால், இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில தினங்கள் சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
சென்னை விடாமல் மழை பெய்து சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்தைப் போன்று மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டே இருக்கின்றது. அதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.