வடதமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அரபிக் கடலில் குறைந்தழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும் அது 3 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடதமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலில் நாளை மறுநாள் குறைந்தழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.