தமிழ்நாடு

”முன்பதிவுக்கான தொகையை நாளை முதல் பெறலாம்” - ரயில்வே நிர்வாகம்

jagadeesh

சென்னை கோட்டத்தில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் என்றும், ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் எடுத்தவர்களுக்குக் கட்டணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்குத் திரும்ப வந்துவிடும் என்றது.

இந்நிலையில், கவுண்ட்டர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு ஏதுவாக சென்னை கோட்டத்தில் உள்ள 19 முன்பதிவு மையங்கள் நாளை முதல் செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, மயிலாப்பூர், மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுன்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர் செயல்பட உள்ளன.

மேலும் அரக்கோணம், காட்பாடி, வாலாஜாபாத் சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய முன்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை கொடுத்து கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.