செய்தியாளர்: ரா.மணிகண்டன்
அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் திப்ருகர் - கன்னியாகுமரி வரையிலான விவேக் ரயிலானது, நேற்று வழக்கம் போல் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ஈரோடு இருப்புப்பாதை காவல்துறையினர் "கஞ்சா வேட்டையில்" ஈடுபட்டனர்.
இதில் முன்பதிவு பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில், கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சாவை கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் கஞ்சா இருந்த பைகளை யாரும் உரிமை கோராததால் அவற்றில் இருந்த 80 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சாவை இருப்புப்பாதை காவல்துறையினர் பறிமுதல் செய்து, கடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.