செய்தியாளர்: மணிகண்டபிரபு
ரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்த லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதனால் தேர்வெழுத தெலங்கானா மாநிலத்திற்குச் சென்ற தேர்வர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான CBT தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வெழுதும் நபர்களுக்கு 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அதை மாற்ற வேண்டுமெனக் கோரி தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொண்டோம். ஆனால், உடனடியாக 6000 தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் தேர்வு செய்ய முடியவில்லை என தேர்வு வாரியம் பதில் அளித்தது.
இத்தனை தடைகளையும் மீறி இன்றைய தினம் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து தமிழ்நாட்டு தேர்வகள் தேர்வெழுத சென்றனர். ஆனால், இன்று திடீரென தொழில்நுட்பக் காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்வெழுத சென்றவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து தேர்வெழுத வருவோருக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைக் கூட முன்னெச்சரிக்கையாக செய்திடாமல் இருப்பது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உட்சம்.
இந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து முறையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒரு தேர்வு தேர்வர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வியல் தேவையையும் சூறையாடுகிறது. இது ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனை ஒரு போதும் ஏற்க முடியாது. பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும்.
எனவே இதன் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேர்வையாவது தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அமைத்து நடத்தப்படுவதை ரயில்வே அமைச்சகமும், ரயில்வே தேர்வு வாரியமும் உறுதிபடுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.