தமிழ்நாடு

சுகாதாரத்துறை முன்னாள் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கலிலுல்லா

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்துவரும் நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வளசரவாக்கம் பெத்தானியா நகர், 5 வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற அதிகாரி சீனிவாசன் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறுகிறது.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது சீனிவாசன் சுகாதாரத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்தவர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சோதனை முழுமையாக முடிந்த பிறகே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.