தமிழ்நாடு

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Veeramani

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கு பின்னர் இதுகுறித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ ரெய்டு மூலமாக அச்சுறுத்தினால் அதனையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது.  இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். மேலும், இதுகுறித்த சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக தயாராகவே உள்ளது. எந்தவொரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் அரசியலில் அபாயகரமான சூழலினை உருவாக்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு ரெய்டு நடத்துவது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.

இன்று முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள 24 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.