தமிழ்நாடு

ராகுல் காந்தியின்  நடைபயணம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் - கேஎஸ்.அழகிரி நம்பிக்கை

webteam

ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ள ஒற்றுமை நடைபயணம் மக்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள ஒற்றுமை நடை பயணம் குறித்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாநகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசு, காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... மத்திய அரசின் பல்வேறு தவறான கொள்கைகள் காரணமாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்திற்கு மேல் குறைந்துவிட்டது. ,மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகித்ததிற்கு மேல் இருந்தது..
பாஜக ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி, விவசாயம் என அனைத்து துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

கட்சியிலிருந்து விலகுவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக மோடியின் செயல்பாடுகளை குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகள் குறித்து பேசிய அழகிரி, அண்ணாமலை வரம்பு மீறி பேசி வருகிறார். அரசியலில் கொள்கைகளுக்கு எதிராக பேசலாம் ஆனால், அண்ணாமலை வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

தமிழக அமைச்சர்கள் குறித்து அவர் பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்முறையை தூண்டுவதே ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை என்று விமர்சித்த கே.எஸ்.அழகிரி பிரிவினையை தூண்டி ஆதாயம் பார்க்கும் பாஜகவின் நடவடிக்கைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தை தோழமைக் கட்சிகள் புறக்கணிக்கப்பதாக வெளியாகி வரும் தகவல் முழுக்க முழுக்க தவறானது,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி எடுத்துக் கொடுத்த பின்னரே ராகுல்காந்தி தனது நடைபயணத்தை தொடங்க உள்ளார். இதில், தோழமைக்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்த அழகிரி, ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை நடைபயணம் மக்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.