ராகுல்காந்தி - ஸ்டாலின்  web
தமிழ்நாடு

தமிழ்நாடு தேர்தல் 2026.. முதன்றையாக பரப்புரையில் ஈடுபடும் ராகுல்காந்தி.?

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 18) தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட இழுபறிக்குப் பிறகு, 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, கூட்டணிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ராகுல்காந்தி தமிழகத்தின் தேர்தல் பரப்புரையில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார் என கூறப்பட்டு வந்தது. அதை வலுசேர்க்கும் வகையில், ஏப்ரல் 6 தேதி புதுச்சேரியில், முதல்வர் ஸ்டாலினும், ராகுல்காந்தியும் தனித்தனியாக பரப்புரையில் ஈடுபட்டனர். எனினும் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.

ராகுல்காந்தி

இந்த நிலையில், ராகுல்காந்திக்கும் திமுகவுக்குமான முரண்பாடு தொடர்ந்து வருகிறது எனப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், வரும் சனிக்கிழமை ராகுல்காந்தி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மேற்குவங்கம், அசாம் மற்றும் கேரளாவில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் பரப்புரையில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

தற்போது, வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 18) காலை பொன்னேரி மற்றும் சோளிங்கரில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், சனிக்கிழமை மாலை துறையூரில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ஒரே நாளில் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் ராகுல் காந்தி சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் பங்கேற்கிறார்.

ராகுல் காந்தி தமிழ்நாடு பரப்புரை ஒருங்கிணைப்பு பணிகளில் செல்வபெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் தகவல் வெளியாகியிருக்கிறது.