தமிழ்நாடு

கூலி வேலை.. குப்பை சேகரிப்பு.. வைராக்கியத்தால் தனக்கு தானே சிலை அமைத்துக்கொண்ட நபர்.!

webteam

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வைராக்கியம் என்ற வார்த்தையை தாரக மந்திரமாக கொண்டு ஒருவர் வாழ்க்கையில் முன்னேறி தனக்கு தானே சிலை அமைத்துக் கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் பேளூர் அணைமேடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர் நல்லதம்பி. குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் குடும்பத்தினர் தன்னை உதாசீனப்படுத்தியதாலும் வீட்டை விட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறியுள்ளார். கட்டடத் தொழிலாளியான இவர் தனக்குக் கிடைத்த கூலி வேலைகளை செய்து பணம் ஈட்டியுள்ளார். அதனை சிறுக சிறுக சேமித்த அவர் அதைக்கொண்டு ஏழு வீட்டுமனைகளை தன் பெயரில் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், வாழப்பாடி அருகே அத்தனூரில் ஒரு சிறிய மண்டபம் கட்டி அதனுள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் தன்னுடைய சிலையையே வடிவமைத்துள்ளார் நல்லதம்பி. தற்போது வயது முதிர்வின் கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை என்றாலும் சற்றும் சோர்ந்துவிடாமல் சாலையோரங்களில் குப்பைகளில் கிடக்கும் பாட்டில்களை சேகரித்து அதன்மூலம் வருவாய் ஈட்டி வருவதாக தெரிவிக்கிறார்.