தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் உயிரிழப்பு - முதல்வர் இரங்கல்

Sinekadhara

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த புதிய தலைமுறை ஊழியர் முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையிலுள்ள புதிய தலைமுறை தலைமை அலுவலகத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் முத்துகிருஷ்ணன்(24). இவர் நேற்றிரவு பணிமுடிந்து திரும்பும்போது ஜாபர்ஜான்பேட்டை பகுதியில் தோண்டப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த முத்துகிருஷ்ணனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த புதிய தலைமுறை பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம், பத்திரிகையாளர் குடும்ப உதவித்திட்டத்தின்கீழ் ரூ. 3 லட்சம் என ரூ. 5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. எனவே இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடராத வண்ணம் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.