தமிழ்நாடு

புதுக்கோட்டை வங்கியில் நகைகள் மாயமான வழக்கில் புதிய திருப்பம்

webteam

புதுக்கோட்டையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி உதவியாளர் மாரிமுத்து, கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில், மாரிமுத்து என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 28ஆம் தேதி காணாமல் போன இவர், கோடியக்கரை அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சந்தேகமான முறையில் இறந்து கிடந்த அவர், கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 

மாரிமுத்துவின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், எலும்புகள் உடைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மாயமான நிலையில், அதற்கும், மாரிமுத்துவுக்கும் தொடர்பு உள்ளதா எனக் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதனிடையே, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வெளியாகியுள்ள தகவல், இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.