தமிழ்நாடு

"கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேச எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது" - புகழேந்தி கேள்வி

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொண்டேன் என்ற எடப்பாடி, கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேச என்ன தகுதி உள்ளது என ஒசூரில் அளித்த பேட்டியில் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி வளாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளருமான புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘’கள்ளக்குறிச்சி நான் பிறந்து வளர்ந்த இடம். விவசாயம் நிறைந்த இந்தப் பகுதியில் இதுபோன்ற மிகப்பெரிய கலவரத்தை நான் கண்டதில்லை. திட்டமிட்டு கலவரம் செய்யவேண்டிய அவசியம் என்னவென்றுதெரியவில்லை. போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கொரோனா அறிகுறியால் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரை கலவரத்திற்கு பொறுப்பேற்க கூறும் எடப்பாடி அவர்களே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தியை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொண்டேன் என பேசிய அப்போதைய முதல்வரான உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? பென்னிக்ஸ், ஜெயராஜ் தந்தை - மகன் லாக்அப் மரணம் நடந்தது யார் ஆட்சியில்? கலவரம் தூண்டும் வகையில் பேசும் இபிஎஸ் அவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’’ என்றார்