புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நெல் அறுவடை இயந்திரத்தில் மோதி தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் திருமணமான பத்து நாட்களே ஆன பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று இரவு 31 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் அந்த தனியார் பேருந்து இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பொம்மாடிமலை என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த அறுவடை செய்யும் இயந்திரத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (23), மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் வண்ணான்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சரண்யா (26) என்ற பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் சரண்யாவிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அருண்பாண்டியன் என்பவரோடு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் அருண்பாண்டியன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மேலும் விபத்தில் காயமடைந்த 29 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விபத்து சம்பவத்தால் திருச்சி - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்தும் விபத்திற்கான காரணம் குறித்தும் கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.