தமிழ்நாடு

புதுக்கோட்டை: பணம், நகைக்காக தாய், மகன் கொடூர கொலை – சிசிடிவி ஹாட் டிஸ்கும் மாயம்

webteam

பொன்னமராவதி அருகே பணம், நகைக்காக கட்டட பொறியாளர் மற்றும் அவரது தாயார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (55). இவரது மனைவி உஷா ஆசிரியராக கரூரிலும், மகன் ஸ்ரீதர் சென்னையில் ஐடி நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர். பழனியப்பன், வேந்தன்பட்டி மற்றும் அதளை சுற்றிய பகுதிகளில் புதிய கட்டட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வேந்தன்பட்டியில் உள்ள அவரது புதிய வீட்டில் தங்கியுள்ள பழனியப்பன், தனது பூர்வீக வீட்டில் வசிக்கும் அவரது தாயார் சிகப்பி (75) என்பவருக்கு நேற்றிரவு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து பழனியப்பன் இன்று காலை வரை புதிய வீட்டிற்கு வராத நிலையில், அவரிடம் வேலை பார்க்கும் பணியாட்கள் அவரைத் தேடி பழனியப்பனின் தாயார் சிகப்பி வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு இருவரும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், பொன்னமராவதி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியோடு கொலை சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கொலை சம்பவம் குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பணம் மற்றும் நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும், அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கை கொலையாளிகள் எடுத்துச் சென்ற நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பழனியப்பனின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்புகள், அங்கு கிடைக்கப்பெற்ற தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தாய் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.