தமிழ்நாடு

புதுக்கோட்டை: கண்ணில் புதைந்த இரும்புத் துகள்கள் - கச்சிதமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்

புதுக்கோட்டை: கண்ணில் புதைந்த இரும்புத் துகள்கள் - கச்சிதமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்

kaleelrahman

மலேசிய நாட்டில் பணிசெய்தபோது கண்ணுக்குள் விழுந்த இரும்புத் துகள்களால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு, மைக்ரோடீபிரைடர் கருவிகள் மூலம் 4 மணிநேரம் போராடி துல்லியமாக எடுத்து சாதனை படைத்துள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (36). இவருக்கு நீண்ட நாட்களாக தலைவலி இருந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் காது, மூக்கு, தொண்டை பிரிவில் சிகிச்சை பெற வெளி நோயாளியாக சேர்ந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் அவரது காது மூக்கு தொண்டையில் சோதனை செய்தபோது எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது. எனவே முருகேசனுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அதில், வலது கண்ணும் மூக்கும் சேரும் இடத்தில் இரும்புத் துகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முருகேசனிடம், மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் மலேசியாவில் வேலை பார்த்தபோது சில இரும்புத் துகள்கள் வலது கண்ணின் வெளிப்பாகத்தில் புதைந்தது என்றும், அதற்கு அங்கேயே சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் அப்போது சிடி ஸ்கேன் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். அதன் பின்னர் ஒருவருட காலமாக தலைவலியுடன் மலேசியாவில் வைத்தியம் எடுத்துக்கொண்டதாகவும், பின்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊருக்கு வந்த பின்பும் தலைவலி நிற்காததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், காது மூக்கு தொண்டை தலைமை மருத்துவர் ராஜா கணேஷ் தலைமையில் ஆறுமுகம், அருணகிரி, ராயப்பன் குமார் ஆகியோர் அடங்கிய அறுவை சிகிச்சை குழுவினர் மற்றும் மூன்று பேர் கொண்ட மயக்கவியல் குழு மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்து மூக்கு வழியாக எண்டோஸ்கோப் மூலம் கண்ணுக்குள் உள்ள கொழுப்பில் புதைந்திருந்த இரும்புத் துகளை மைக்ரோடீபிரைடர் கருவிகள் மூலம் பார்வைக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் 4 மணி நேரம் போராடி துல்லியமாக எடுத்தனர்.

இந்நிலையில் தற்போது பூரணகுணம் அடைந்துள்ள முருகேசனுக்கு மேற்கொள்ளப்பட்ட கண் பரிசோதனையில் பார்வை நன்றாக உள்ளதாகவும், தலைவலி குறைந்துள்ளதாகவும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக கண்ணுக்குள் விழுந்த துகள்களால் பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளித்து குணமடைய செய்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவிற்கும், மருத்துவமனைக்கும், தமிழக அரசுக்கும் முருகேசன் தனது நன்றியை தெரிவித்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை முதல்வர் பூவதி கூறும் போது... இத்தகைய அரிய அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் ஆகும். ஆனால், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலுமாக இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய அறுவை சிகிச்சையை செய்த காது மூக்கு தொண்டை குழுவினருக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.