புதுக்கோட்டை-திருச்சி சாலையில் 8-ம் நம்பர் அரசுப் பேருந்தில் பழங்குடியின மாணவிகள் ஏறியபோது, கூட்டம் அதிகம் எனக் கூறி நடத்துனர் அவர்களை இறங்கச் சொன்னதாக தகவல். மறுத்த மாணவிகளில் ஒருவரை தள்ளியதால், 8க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், பெற்றோர் மற்றும் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை - திருச்சி சாலையில் ரெங்கம்மாள்சத்திரம் அருகே, கீரனூரில் இருந்து புதுக்கோட்டையில் உள்ள பள்ளிக்கு செல்ல அவ்வழியாக சென்ற 8-ம் நம்பர் அரசுப் பேருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ஏறியுள்ளனர். பேருந்து சிறிது தூரம் சென்றவுடன் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்த சிறுமிகளை நடத்துனர் கீழே இறங்கக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. பள்ளிக்கு நேரமானதால் அந்த மாணவிகள் கீழே இறங்க மறுத்ததாகவும், இதனால் நடத்துனர் அந்த மாணவிகளில் ஒருவரைத் தள்ளிவிட்டதாகவும், அந்த மாணவியைப் பிடிக்கச் சென்று ஒன்றன் பின் ஒன்றாக 8க்கும் மேற்பட்ட மாணவிகள் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் சிறுமிகளின் கை, கால் மற்றும் தலை பகுதிகளில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அழுது துடித்துள்ளனர். இதனைக் கண்ட அவ்வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து, சிறுமிகளை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தின் மண்டல மேலாளர் கார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தற்போது தான் தகவல் கிடைத்ததாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுநர் தவறு செய்திருப்பின் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாணவர்களின் பெற்றோரும் அக்கிராம பழங்குடியின மக்களும் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். பல போராட்டங்களுக்கு பிறகு எங்கள் பிள்ளைகள் இப்போதுதான் கல்வி கற்கவே செல்கின்றனர். அனைத்து மாணவர்களும் பேருந்தில் செல்லும்போது, எங்கள் பிள்ளைகளை மட்டும் அவதூறாகப் பேசுவது, கீழ்த்தரமாக நடத்துவது என தொடர்ச்சியாக நடைபெறவதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசாரணைக் குழு அமைத்தும், சம்பவத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநரை பணி இடைநீக்கம் செய்தும், ஒப்பந்தப் பணியாளரான நடத்துனரை பணிநீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8க்கும் மேற்பட்ட மாணவிகளை பேருந்தில் இருந்து நடத்துனர் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார். ர