தமிழ்நாடு

புதுக்கோட்டை: குளிக்கச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம்

webteam

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் குளத்திற்கு குளிக்கச் சென்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து கடந்த சில மாதங்களாக துரித உணவு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது மகன் பிரகதீஸ்வரன் என்ற 13 வயது சிறுவன், அக்கிராமத்தில் உள்ள பெரிய குளத்திற்கு இன்று குளிக்க சென்றபோது குளத்தின் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளான்.

அதனை பார்த்த அருகே இருந்தவர்கள் ஓடிச் சென்று சிறுவனை காப்பாற்ற முயன்றபோது, அதற்குள் சிறுவன் பிரகதீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.