தமிழ்நாடு

சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை - கடைசியில் நேர்ந்த துயரம்!

webteam

புதுச்சேரியில் சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி புதுசாரம் வெங்கடேஸ்வரா நகர், இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மேரி ரோஸ்லின் (27). இவரது கணவர் தினேஷ்குமார் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனது தந்தை உடன் வசித்து வரும் மேரி ரோஸ்லின், 45 அடி சாலையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை செய்து வருகின்றார். இவரது 3 வயது மகள் தியா கடந்த 11-ம் தேதி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு கிடந்த எலி பேஸ்ட்டை, சாக்லெட் என எடுத்து சாப்பிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த குழந்தையின் தாத்தா அக்குழந்தையை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது மருத்துவர்கள் மேல் கிச்சைக்காக சென்னை அழைத்து செல்லக் கூறியதை அடுத்து குழந்தை தியாவை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அதிகாலை குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இது தொடர்பாக புதுச்சேரி தன்வந்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூன்று வயது குழந்தை எலி பேஸ்ட்டை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.