தமிழ்நாடு

சைக்கிளுக்கு கூட 10 ரூபாய் கட்டணம் வசூலா..! அதிருப்தியில் மதுரை ரயில் பயணிகள்

Sinekadhara

மதுரை ரயில் நிலைய வளாகத்திற்கு வரும் சைக்கிள்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். 

மதுரை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ரயிலில் நிலையத்திற்கு வரும் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை ரயில்நிலைய வளாகத்தில் சூழ்ந்து பிரீமியம் டோக்கன் போட குத்தகைதாரர்கள் சுற்றிதிரிந்து வருகின்றனர்.

குறிப்பாக மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவாயில் பகுதியில் ரயில்வே ஊழியர்களுக்கான பிரத்யேக வாகன நிறுத்தத்தில் ’’பிரீமியம் வாகன காப்பகம்’’ என்ற பலகை வைத்து வசூலில் தீவிரம்காட்டி வருவது பயணிகள் மற்றும் ரயில்வே துறை பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக இருசக்கர வாகனத்திற்கு முதல் 6 மணி நேரத்திற்கு 20ரூபாயும், சைக்கிள்களுக்கு 12 மணி நேரத்திற்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் மேற்கு நுழைவாயில் பகுதியில் பல அடுக்கு வாகன காப்பகம் ஏற்கெனவே செயல்பட்டு வருகிற நிலையில், அதன் குத்தகைதாரர்கள் ரயில் வளாகம் முழுவதையும் ஆக்கிரமித்து வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி இருசக்கர வாகனத்திற்கு 12 மணி நேரத்திற்கு 8 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.