தமிழ்நாடு

கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

webteam

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலுள்ள காளிதிம்பம் மலைக்கிராமத்தில் கால்நடைகளை கொன்று வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

பகல் நேரங்களில் உலா வரும் அந்தச் சிறுத்தை கண்ணில்பட்ட கால்நடைகளையெல்லாம் கொன்று வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5க்கும் அதிகமான ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னராஜ் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுத்தை மாட்டை கடித்துள்ளது. சத்தம் கேட்டு, ஓடி வந்த கிராம மக்கள் சிறுத்தையை விரட்டி அடித்துள்ளனர். இதனையடுத்து தலமலை வனச்சரகர் பழனிச்சாமியிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்துள்ளனர். 

அதனையடுத்து, இரவு நேரங்களில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும், வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதனால், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க காளிதிம்பம் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்‌ளனர்.