தமிழ்நாடு

அரக்கோணம் இரட்டை கொலை: உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக தொடரும் போராட்டம்

webteam

அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூரில் கடந்த 7ஆம் தேதி இருதரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் சோகனூர் பகுதியை சேர்ந்த சூர்யா, அர்சுனன் ஆகியோர் பெருமாள்ராஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 4-வது நாளாக சோகனூர் பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் வாங்க மறுத்துள்ளனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் சோகனூர் பகுதிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் போராட்டத்திலும் நேற்று கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இன்றும் இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.